நெல் பயிரில் ஆனைக் கொம்பன் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண்துறை ஆலோசனை
புற ஊதா விளக்குப் பொறிகளை வைத்து ஈக்களை கவர்ந்தும் அழிக்கலாம்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் உள்ள ஆனைக்கொம்பன் தாக்குதலைக் கட்டுப்படுத்தி அதிக மகசூல் அடைந்திட முடியும் என வேளாணதுறை யோசனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது நிலவும் சீதோஷண நிலையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் பரவலாக ஆனைக் கொம்பன் தாக்குதல் காணப்படுகிறது. ஆனைக்கொம்பன் ஈக்கள் கொசுவைப் போல் சிறியவைகளாகவும், நீண்ட மெல்லிய கால்களையும் கொண்டுள்ளது. பெண் பூச்சிகள் மஞ்சள் கலந்த சிவப்பு நிறமாகவும், தடித்த வயிற்றுப்பாகத்தைக் கொண்டும் இருக்கும். ஆண் பூச்சிகள் மெல்லியவைகளாகவும் கரும் சிவப்பு நிறத்திலும் காணப்படும். ஈக்கள் இரவு வேளைகளில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை .
இப்பூச்சி நெற்பயிரின் தூர்களின் குருத்து பகுதியை தாக்கிய இலையானது வெங்காய இலை போன்று மாற்றிவிடும். ஈ வகையை சேர்ந்த இதனுடைய புழுப் பருவம் பயிர்களை தாக்குவதனால் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் தோன்றும். இந்த கிளைப்புகள் வெண்மையாகவோ அல்லது இளஞ் சிவப்பு நிறமாகவோ குழல் போன்று வெங்காய இலையைப் போல காணப்படும். இதை பார்ப்பதற்கு யானையின் கொம்பை போல் இருப்பதனால் இது ஆனைக் கொம்பன் என்று அழைக்கப்படுகிறது.
தாய்ப்பூச்சியானது நீளமான உருளை வடிவிலான பளப்பளப்பான முட்டைகளை இலையின் அடிப்பகுதியில் இடும். இதிலிருந்து வெளியாகும் புழுக்கள் நெற் பயிரின் குருத்துக்களை துளைத்து குழல்களாக மாற்றி விடும். இதனால் பயிரில் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் தான் இந்த புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும்.
எனவே, விவசாயிகள் வயல்களை களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருப்பதனாலும், புற ஊதா விளக்குப் பொறிகளை வைத்து ஈக்களை கவர்ந்தும் அழிக்கலாம்.தழைச்சத்து உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தினால் இதன் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும் .
மேலும், இப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலை அளவை அதாவது (10இலைக்கு ஒரு இலை வெங்காயத்தாள்;) விட பாதிப்பு அதிகமாகும் போது மகசூல் இழப்பு ஏற்படும். இதை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்துகளான கார்போசல்பான் 25 சத ஈ.சி - 300 மிலி அல்லது பிப்ரோனில் 5 சத எஸ்.சி - 400 மி.லி ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் மா.பெரியசாமி தெரிவித்துள்ளார்