பெரம்பலூர் மாவட்ட நலவாரியத்தில் உறுப்பினராக சேர கலெக்டர் வேண்டுகோள்
பெரம்பலூர் மாவட்ட நலவாரியத்தில் உறுப்பினராக சேர கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலம் 2008-ஆம் ஆண்டு முதல் தூய்மை பணிபரிவோர் நலவாரியம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் தூய்மை பணிபுரிவோர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் நலவாரிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்புசாரா, தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோவின் மூலமாக தூய்மை பணிப்புரிவோர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டு கல்வி உதவிதொகை, திருமண உதவி தொகை மகப்பேறு உதவி தொகை, முதியோர் உதவி தொகை மற்றும் கண் கண்ணாடி வாங்கிட உதவி தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளது.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, நகர பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலங்களுக்கு அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்புசாரா, தூய்மை பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் ,உதவி செயற் பொறியாளர் ,செயல் அலுவலர் ,கிராம நிர்வாக அலுவலர் அவர்களின் கையொப்பத்துடன் மாவட்ட மேலாளர், தாட்கோ, பெரம்பலூர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஏதேனும் விபரங்களுக்கு 04328 – 276317 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.