மாநிலஅளவில் அரசு கலைக்கல்லூரி சேர்க்கைக்கு நாமக்கல் கல்லூரியில் சேவை மையம்
மாநில அளவில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், இளநிலைப் பட்ட முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு,இண்டர்நெட் மூலம் விண்ணப்பிக்க, மாணவர் சேர்க்கை சேவை மையம், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, இமெயில் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றுடன் காலை 10 மணி முதல், மாலை 4 மணி வரை இந்தச் சேவை மையத்தில் தங்களது சேர்க்கை விண்ணப்பத்தை அப்லோடு செய்து கொள்ளலாம்.
பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 48, பதிவுக் கட்டணமான ரூபாய் 2 என மொத்தம் ரூ.50 செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்குப் பதிவுக் கட்டணமாக ரூ. 2 மட்டும் செலுத்தினால் போதும். விண்ணப்பம் மற்றும் பதிவுக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைக் கலைப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், எகனாமிக்ஸ், காமர்ஸ், வணிக நிர்வாகவியல், வரலாறு பாடப்பிரிவுகளுக்கும், அறிவியல் பிரிவில் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், புவியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல் பாடப்பிரிவுகளுக்கும் மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.