நாமக்கல் மாவட்டத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் டாப் ஷீட் தைக்கும் பணி துவக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் டாப் ஷீட் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
HIGHLIGHTS
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வு நடக்கவில்லை. இந்த ஆண்டு, வரும் மே 5ல் பிளஸ் 2க்கும், 6ல் 10ம் வகுப்புக்கும், 10ல் பிளஸ் 1 க்கும் பொதுத்தேர்வு துவங்குகிறது. இதையொட்டி, முதல் கட்டமாக, மாவட்ட வாரியாக தேர்வில் மாணவர்கள் பயன்படுத்தும் விடைத்தாள்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது.
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 255 மையங்களில், பொதுத் தேர்வுகள் நடைபெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 20,662 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 1 தேர்வை 19,842 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை, 19,866 பேர் எழுதுகின்றனர். பொத்துதேர்வுகளுக்கான விடைத்தாள்கள், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலக கிடங்கில் இருந்தும், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கிடங்கில் இருந்தும், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, வகுப்பு வாரியாக பிரித்து அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்வு நேரத்தில், குளறுபடிகளை தவிர்க்க, பல்வேறு மாற்றங்களை அரசு தேர்வுத்துறை கொண்டு வந்துள்ளது. அதன்படி, விடைத்தாளில் மாணவர் புகைப்படம், பார்கோடு, சீரியல் எண், ரகசிய குறியீடு, தேதி, பாடம், மதிப்பெண் பட்டியல் அடங்கிய, அச்சிடப்பட்ட டாப் ஷீட் அறிமுகப்படுத்தப்பட்டது. அவை, விடைத்தாளுடன் இணைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விடைத்தாள்களுடன், டாப் ஷீட் இணைத்து தைக்கும் பணி, அந்தந்த பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாமக்கல் கல்வி மாவட்டத்தில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், விடைத்தாள் டாப் ஷீட் தைக்கும் பணியில் திரளான அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.