உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்டரூ. 19 இலட்சம் பறிமுதல்
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 19 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் மெகராஜ் பேட்டி
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் கையெழுத்து இயக்கம், மாதிரி வாக்குப்பதிவு பயிற்சி என பல்வேறு நிகழ்வுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன .
இதன் ஒருபகுதியாக 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் நூறு சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்து பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல்லில் பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப் போட்டி நடைபெற்றது. பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பல்வேறு வண்ணங்களில் கோலங்களை போட்டனர். இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான மெகராஜ் பார்வையிட்டார். தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இறுதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மெகராஜ், நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 19 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 4 நபர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை திரும்ப பெற்றுள்ளனர். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் பெட்ரோல் பங்க்குளில் பிரதமர் மோடியின் படத்தை மறைப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த பணி தற்போது நடைப்பெற்றது வருவதாகவும் தெரிவித்தார்.