நாகை: நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் விபத்தில் உயிரிழப்பு
நாகை நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் விசைப்படகின் ரோப் கம்பி நெஞ்சில் அடித்து பரிதாபமாக உயிரிழப்பு .
HIGHLIGHTS
கடந்த 1 ஆம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டம் கீழ மூவர்க்கரை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை நாகையில் இருந்து 15 நாட்டில்கள் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மீன்வலைகளை இழுக்க பயன்படும் விசைப்படகின் ரோப் கம்பி அறுந்து மீனவர் பாவாடைசாமியின் நெஞ்சில் அடித்ததில் அவர் படகிலேயே சுருண்டு விழுந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் படுகாயமடைந்து மூச்சு பேச்சில்லாமல் கிடந்த மீனவர் பாவாடை சாமியை நாகை துறைமுகம் கொண்டு வந்துள்ளனர்.
பின்னர் துறைமுகத்தில் இருந்து நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்த மீனவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறினார்கள். நடுக்கடலில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ரோப் கம்பி நெஞ்சில் அடித்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர் உயிரிழப்பு குறித்து நாகை கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.