நாகையில் முதியோர் உதவித்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய மூதாட்டி
நாகப்பட்டினத்தில் ஆதரவற்ற நிலையிலும் முதியோர் உதவித்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு மூதாட்டி வழங்கினார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் நோய்த்தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி வழங்க பொதுமக்களுக்கு சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூரை அடுத்த அருள்மொழிதேவன் மேலே தெருவை சேர்ந்தவர் 70 வயதான மூதாட்டி சந்திரா. இவரது கணவர் கூடலிங்கம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இயற்கை எய்தினார்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத சூழ்நிலையை தனித்து ஆதரவற்ற நிலையில் வசித்து வருகிறார் சந்திரா. இதனையடுத்து இவருக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் 5 கிலோ அரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் தமிழக முதல்வருக்கு உதவ நினைத்த சந்திரா ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியத்தை சந்தித்து தனது ஒரு மாத ஊதியத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அனுமதி கோரியுள்ளார். இதனிடையே இன்று ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சந்திராவை அழைத்து வந்தார்.
அப்போது இந்தமாதம் தனக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயும் 5 கிலோ அரிசியும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயரிடம் மூதாட்டி சந்திரா வழங்கினார்.
ஆயிரம் ரூபாயைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அரிசியை மூதாட்டியிடமே திரும்ப வழங்கி அரிசி மூதாட்டி பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார். மேலும் மூதாட்டிக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் மூதாட்டி சந்திராவிடம் தெரிவித்தார்.
அதனைப் பெற்றுக்கொண்ட மூதாட்டி சந்திரா மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். மேலும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டத்தில் தானும் பங்கேற்பதற்கு மகிழ்ச்சியளிப்பதாக மூதாட்டி சந்திரா தெரிவித்தார். வசதி படைத்தவர்களே உதவி செய்ய முன்வராத நிலையில் தனக்கு ஆதாரமான ஆயிரம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய மூதாட்டியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.