அதிமுக ஆட்சியில் மாணவர்கள் தற்கொலை - கனிமொழி
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தியது அதிமுக அரசு என நாகையில் கனிமொழி எம் பி பேசினார்.
நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் ஆளூர் ஷாநவாஸ்க்கு ஆதரவாக கனிமொழி எம்பி., நாகூரில் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்: இனிவரும் காலங்களில் சமஸ்கிருதம் தெரிந்தால் மட்டும் தான் இனி மருத்துவ படிப்புகள் படிக்க முடியும் என்ற நிலையை பாஜக உருவாக்கியுள்ளது. சாமானிய வீட்டுப் பிள்ளைகளும் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ கல்லூரியை உருவாக்கியவர் கருணாநிதி எனவும், அந்த கனவு நிறைவேறாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தியது அதிமுக அரசு எனவும், கூறினார்.
தமிழகத்தையே அடகு வைத்த இவர்களுக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளை காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறது. காரணம் குற்றவாளிகள் அனைவரும் அதிமுகவினர் என்றும், இந்த ஆட்சியில் யாரும் கேள்வி கேட்க முடியாது. தூத்துக்குடியில் கேள்வி கேட்ட 13 பேர் கொல்லப்பட்டனர். இதுதான் அதிமுக ஆட்சியின் அராஜகம் எனவும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் மீண்டும் அதிமுக ஆட்சி வந்தால் நிறுத்தப்படும் என மத்தியில் கையெழுத்து போட்டுள்ளனர். இதனை தடுக்க திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என கனிமொழி கூறினார்.