ஆம்புலன்சில் கஞ்சா கடத்தல் - 4 பேர் கைது
இலங்கைக்கு ஆம்புலன்சில் நூதன முறையில் கஞ்சா கடத்திய சென்னையை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தோப்புத்துறை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் வேனை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் ஆம்புலன்ஸில் உள்ளே சுமார் 28 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீசார் கடத்தலில் ஈடுபட்ட சென்னை அயனாவரம், வில்லிவாக்கம் பகுதிகளை சேர்ந்த ராஜ்குமார், மகேந்திரன், விக்னேஷ், சுந்தர் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் சென்னையில் இருந்து வேதாரண்யத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கடத்தி வரப்பட்டு அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது. உயிர்காக்க பயன்படுத்தப்படும் ஆம்புலன்சை, போலீசார் கண்ணில் மண்ணைத் தூவி கஞ்சாவை கடத்த கடத்தல்காரர்கள் திட்டமிட்டு அதனை பயன்படுத்தியது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.