ஜெயலலிதாவை மிஞ்சி ஊழல் செய்த கே.பி.முனுசாமியை தோற்கடியுங்கள்: உதயநிதி
ஜெயலலிதாவை மிஞ்சி ஊழல் செய்த கே.பி.முனுசாமியை தோற்கடியுங்கள் என வேப்பனஹள்ளி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதி வேட்பாளர் முருகனை ஆதரித்து, குந்தாரப்பள்ளி கூட் ரோடு அருகே திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: உங்கள் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிடும் முருகன் உங்கள் ஊர்காரர். அவருக்கு தான் உங்கள் நல்லது கெட்டது தெரியும். இவருக்கு எதிராக அதிமுக சார்பில் போட்டியிடுபவர் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி. அவர் வெளியூர்காரர். அவர் ஏன் அங்கு போட்டியிடாமல் இங்கே போட்டியிடுகிறார். அவர் கே.பி.முனுசாமி இல்லை. அவர் ஒரு கே.டி.முனுசாமி.
இவர் அமைச்சராக இருந்த போது இந்த தொகுதிக்கு ஏதாவது செய்தாரா? அவர் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது, தமிழகம் முழுவதும் தெருவிளக்கு போட்டதில் அடித்த கொள்ளையை பார்த்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே அசந்து போயிட்டாங்களாம். இது தெரிந்து தம்மை மிஞ்சி ஊழல் செய்த முனுசாமியை அமைச்சர் பதவியை விட்டு ஜெயலலிதா தூக்கினார். அதன் பிறகு சூளகிரி ஒன்றியத்தில் அயர்னப்பள்ளி என்ற இடத்தில் 60 ஏக்கர் இடம் வாங்கி வைத்திருக்கிறார். தென்பெண்ணை ஆற்றில் இருந்து ராயக்கோட்டை தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல, அந்த 60 ஏக்கர் நிலம் தடையாக உள்ளது. அதனால் அங்குள்ள விவசாயிகள் எல்லோரும் போராடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிலம் கொடுக்க முடியாது என்கிறார்.
அதிமுகவில் பல கட்சிகளுக்கு சிலிப்பர் செல்லாக இருப்பது கே.பி.முனுசாமி தான். அதிமுகவில் துணை ஒருங்கிணைப்பாளர் என்று பெயர். ஆனால் அவர் பாஜகவின் சிலீப்பர் செல்லாக இருக்கிறார். கிருஷ்ணகிரியில் கொண்டு வந்த பாதாள சாக்கடை திட்டத்தை முடக்கியவர் அவர். தலைவர் ஆட்சியில் தான் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இன்னும் 40 சதவீதம் கிராமப்புறங்களுக்கு கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக இருந்தவர் அவர் தான். எனவே, இதுபோன்றவரை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அவர் என்ன நல்லது செய்வார்.
எனவே, உங்கள் ஊரை சேர்ந்தவர். உங்களுக்காக ஓடி வருபவர். தற்போது எம்எல்ஏ.வாக உள்ளவர். உங்கள் வீட்டு பிள்ளையாக உள்ள முருகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். முதல்வராக இன்னும் இரண்டு மாதத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் அமரப்போகிறார். அப்போது உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பார். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.