பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை குடியிருப்பு பகுதியில் நிறுத்த எதிர்ப்பு
கிருஷ்ணகிரியில் உணவு பொருள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை குடியிருப்பு பகுதியில் நிறுத்த பொதுமக்கள் எதிர்ப்பு.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி - சென்னை சாலையில், தமிழ்நாடு ஓட்டல் அருகில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவர்கள், ரேஷன் அரிசி கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்கின்றனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அலுவலகம் அருகில் உள்ள காலியிடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அலுவலகத்தைச் சுற்றிலும் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைத்துள்ளதால், வாகனங்கள் சேதம் அடைந்து வருவதோடு, விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த அலுவலகத்தைச் சுற்றி குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைத்துள்ள வாகனங்களை அங்கிருந்து அகற்றி, அதே சாலையில் உள்ள ராணுவ மருத்துவமனை மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி அருகில் கடந்த இரண்டு நாட்களாக பொக்லைன் வாகனங்களை பயன்படுத்தி வாகனங்கள் நிறுத்தி வருகின்றனர். இதனால், பல்வேறு சிரமம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் வாகனங்களை நிறுத்த இன்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள், இன்னும் ஒரு மாதத்தில் இங்கிருந்து வாகனங்களை அப்புறப்படுத்தி விடுவதாக வாக்குறுதி அளித்ததால், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.