சிவராத்திரியையொட்டி மயான கொள்ளை திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் மகா சிவராத்திரியையொட்டி அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மயானக் கொள்ளை திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்
HIGHLIGHTS
காவேரிப்பட்டணத்தில் மகா சிவராத்திரியையொட்டி அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மயானக் கொள்ளை திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள அங்காளம்மன் மற்றும் பூங்காவனத்தம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியையொட்டி, மயான கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம். அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா நேற்று துவங்கியது. விழாவின் முக்கிய நாளான இன்று முகவெட்டு எடுத்து ஆற்றங்கரை செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தியும், உடல் முழுவதும் எலுமிச்சை பழங்களை குத்தியும் ஊர்வலமாக சென்று, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் காளிவேடம் அணிந்து ஊர்வலமாக கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் அலகு குத்திக்கொண்டு மயானம் செல்லுதல் நிகழ்ச்சியும், திருத்தேரில் அம்மன் மயானம் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன் ஊா்வலமாக காவேரிப்பட்டணத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்துக்கு வந்தது. விழாவில் பக்தா்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கிய நிலையில் தேரில் வந்த அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, தர்மபுரி, திருவண்ணாமலை, பெங்களூரு, வேலூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.