பத்தாண்டு சாதனை தொடரட்டும் : விஜயபாஸ்கர்
பத்தாண்டு கால சாதனைகளை கூறி கரூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இறுதிக்கட்ட பரப்புரையில் வாக்கு சேகரித்தார்.
கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார் இன்று காலை அவர் வெங்கமேடு பகுதியில் இறுதி கட்ட பரப்புரையை தொடங்கிய அவர் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அதைத் தொடர்ந்து அவர் கரூர் தொகுதி பல்வேறு இடங்களில் திறந்த வாகனம் மூலம் சென்று வாக்கு கேட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.
இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக அரசு கடந்த பத்தாண்டு காலத்தில் செய்த சாதனைகளை எடுத்துக்கூறி, சாதனைகள் தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என பொதுமக்களை கேட்டுக் கொண்டார். மேலும் கரூர் தொகுதியில் முக்கிய பிரச்சனையான 15,000 மாட்டுவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் குறித்து அவர் பேசுகையில் அதிமுக அரசு கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் மணல் அள்ள நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றுள்ளதாகவும், தேர்தல் முடிந்த பிறகு அந்த இடங்களில் மாட்டுவண்டி மூலம் மணல் மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.