விநாயகர் சிலை வைக்க இந்து முன்னணியினர் முயற்சி: கரூரில் பரபரப்பு
கரூரில், விநாயகர் சிலை வைக்க முயன்ற இந்து முன்னணியினரை, போலீசார் தடுத்து, சிலையை கைப்பற்றினர். இதனால் பரபரப்பு நிலவியது.
HIGHLIGHTS
கரூரில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி கேட்டு, ஆட்சியர் அலுவலகம் மற்றும் கரூர் காவல் நிலைத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை இந்து முன்னணி சார்பில், நான்கடி உயரமுள்ள இரண்டு விநாயகர் சிலையை எடுத்துக் கொண்டு, கரூர் நகரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்கு முன்பு வந்தனர். அங்கு கோயில் முன்பும், வ.உசி வீதி அருகிலும் 2 சிலைகளையும் வைக்க முயன்றனர்.
தகவலறிந்து வந்த கரூர் நகர காவல்துறையினர், இரண்டு சிலைகளையும் பொதுஇடத்தில் வைக்க விடாமல் கைப்பற்றி, பசுபதீஸ்வரர் கோயிலில் வைத்தனர். அப்போது, இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து, கரூர் நகர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.