தாந்தோன்றிமலை கோயில் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்..!
கஞ்சா மற்றும் மது போதையில் தாந்தோன்றிமலை கோயில் கோபுர உச்சியில் ஏறிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய வாலிபரால் பரபரப்பு
HIGHLIGHTS
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை குறிஞ்சி நகரில் வசிப்பவர் ராஜா. இவரது இளைய மகன் ரஞ்சித். வயது 21. பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவில் மது போதையில் இருந்த ரஞ்சித் அருகில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி மலைக் கோவிலின் கோபுர உச்சிக்கு ஏறிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுப்பதாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
ரஞ்சித்தின் உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அப்போது ரஞ்சித்திடம் போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அவனின் தந்தை ராஜா கள்ளக் குறிச்சியை சார்ந்த மணிகண்டன் என்பவரிடம் வாங்கிய கடனை அடைக்க ரஞ்சித்தை வேலைக்கு அனுப்பியுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு கரூர் வந்த இளைஞர் திரும்ப வேலைக்கு போக மாட்டேன் என வீட்டில் பிரச்சினை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து கோபுரத்தின் உள் பகுதியில் போலீசார் பாதி தூரம் ஏறி அவரிடம் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக பேச்சுவார்த்தை நடத்தியதுடன் 500 ரூபாய் செலவுக்கு தருகிறேன் என கேட்டுக் கொண்டதால் தானாக கீழே இறங்கி வந்தான். பின்னர் அவனை தாந்தோணிமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மது மற்றும் கஞ்சா போதையில் இருப்பதால் காவல் நிலையத்தில் வைக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் ரஞ்சித்தின் சித்தப்பாவிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
காவல் நிலையத்தில் இருந்து வெளியேறிய ரஞ்சித் அவர்களுடன் செல்ல மறுத்து தகராறில் ஈடுபட்டதால் உறவினர்கள் அடித்து கையை கயிற்றால் கட்டி இரு சக்கர வாகனத்திக் ஏற்றி வீட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது வீடியோ எடுத்த செய்தியாளர்களை போலீசாரின் முன்னிலையிலேயே ரஞ்சித்தின் அண்ணன் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.