ஜோதிமணியை நீக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
கரூரில் காங்கிரஸ் கட்சியினர் எம்.பி. ஜோதிமணியை கட்சியை விட்டு நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான சீட்டுகளை பெறுவதிலும் தொகுதிகளை பெறுவதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்தப் பதிவில் காங்கிரஸ் கட்சி தலைமை குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கரூர் தான்தோன்றிமலையில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் திரண்டு எம்.பி ஜோதிமணியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், அவர்கள் கட்சித் தலைமையை விமர்சிக்கும் ஜோதிமணியை கண்டித்தும், அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.