மாவட்ட ஊராட்சி கூட்டம்- திமுக வெளிநடப்பு
கரூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
கரூர் மாவட்ட ஊராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி தலைவர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், தமிழகத்தில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கியதற்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு நன்றி அறிவிப்பு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் கார்த்தி, நந்தினி, தேன்மொழி ஆகியோர் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் எட்டாம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் தாமதமாக இப்போது இணையதள சேவை இலவசமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை கண்டித்தும், கரூரில் தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மினி கிளினிக் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து இரண்டு குழந்தைகள் காயமடைந்ததை கண்டித்தும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களின் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும், திமுக உறுப்பினர்களின் கோரிக்கை நிராகரிப்பதைக் கண்டித்தும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.