பொங்கல் பேருந்து வருமானம் குறைவு- விஜயபாஸ்கர்
பொங்கல் பண்டிகையின் போது அரசு போக்குவரத்துக்கழக வருவாய் மிகவும் குறைந்து விட்டதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கரூரில் இன்று கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்த பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளிக்கும் போது கூறியதாவது, ஆந்திர மாநிலத்தில் தமிழக போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 16 பேருந்துகளை அங்குள்ள அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதே போல் ஆந்திர பேருந்துகளும் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆந்திரா, தமிழக மாநிலங்களுக்கிடையே பேருந்துகளை இயக்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளதால் இந்த பிரச்னை எழுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆந்திர மாநில பேருந்துகள் இன்று விடுவிக்கப்படும். அந்த ஒப்பந்தங்களும் புதுப்பிக்கப்படும். பொங்கல் பண்டிகையின் போது அரசு போக்குவரத்து கழகம் மிக குறைந்த வருவாய் ஈட்டியுள்ளது. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்த வருவாய் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.