பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் செம்மண் திருட்டு - 3 பேர் கைது, ஜேசிபி, டெம்போ பறிமுதல்
குமரியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் செம்மண் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் ஜேசிபி, டெம்போவை பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் நிலப்பாறை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சானல் கரை உள்ளது.
இந்த இடத்தில் செம்மண் திருடப்படுவதாக மயிலாடி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வல்சனுக்கு வந்த தகவலின் அடிப்படையில், வல்சன் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது அங்கு ஜேசிபி மற்றும் டெம்போ உதவியுடன் மணல் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வல்சன் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி, அஞ்சுகிராமம் காவல்நிலைய எஸ்ஐ ஜெசி மேனகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மயிலாடி வடக்கூர் பகுதியை சேர்ந்த சபாபதி(45), மயிலாடி சேந்தன்புதூரை சேர்ந்த டெம்போ ஓட்டுனர் வானுமாமலை(43), மகாதானபுரம் சுண்டன்பரப்பை சேர்ந்த செல்வகுமார்(36) என்பதும், அவர்கள் சபாபதிக்கு சொந்தமான நிலத்தில் மண் போடுவதற்காக மணல் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் மற்றும் டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர்.