10 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் இரட்டை கொலை வழக்கு
குமரியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் இரட்டை கொலை வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு குடும்பத்தினர் கோரிக்கை
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தேரூரை சேர்ந்தவர் வன ஊழியர் ஆறுமுகம். இவரது மனைவி யோகேஸ்வரி . இவர்கள் இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி திருமண வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தேரூர் பகுதியில் சென்றபோது இந்த தம்பதியினரை வழிமறித்த ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சுசீந்திரம் போலீசார் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர், இதில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுதலை ஆனார்கள். வன ஊழியர் ஆறுமுகம், யோகேஷ்வரி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை துரிதமாக முடிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர் . மேலும் மதுரை ஐகோர்ட் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் வழக்கு கடந்த 2019ஆம் ஆண்டு நெல்லை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நெல்லை சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கின் ஆதாரங்களை பெற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கினார்கள், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடந்து வரும் நிலையில் வன ஊழியர் தம்பதியினர் கொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆறுமுகத்தின் மகன் முத்துக்குமார் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான சுரேஷ்ராஜனை நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் . அந்த மனுவில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த நீதியும் கிடைக்கவில்லை, எனவே தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த வழக்கை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.