குமரியில் ஓணம் பண்டிகை கொண்டாடி ஆதரவற்ற குழந்தைகள் மகிழ்ச்சி
கன்னியாகுமரியில் ஆதரவற்ற குழந்தைகள் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
HIGHLIGHTS
கேரளா மக்களின் பாரம்பரிய பண்டிகைகளில் மிக முக்கியமானதாக அமைகிறது ஓணம் பண்டிகை, கானம் விற்றாகிலும் ஓணம் கொண்டாடு என்பது பழமொழி அதாவது கால் நிலம் இருந்தாலும் அதனை விற்றாவது ஓணம் கொண்டாடு என்பது பொருள்.
அந்த அளவிற்கு ஓணம் பண்டிகைக்கு கேரளா மக்கள் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் முந்தைய மன்னர் காலத்தில் கேரளாவின் ஒரு பகுதியாக அமைந்து இருந்த கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக ஓணம் கொண்டாட்டங்கள் இல்லாத நிலையில் பலர் தங்கள் வீடுகளில் எளிய முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் அமைந்துள்ள பால மந்திர் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இன்று ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
புத்தாடைகள் அணிந்து இனிப்புகளுடன் அத்தப்பூ கோலம் போட்டு ஓணம் ஊஞ்சல் ஆடி நடைபெற்ற இந்த ஓணம் விழாவில் குழந்தைகளுடன் அந்த பகுதியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.