மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு: 3000 தொழிலாளர் தவிப்பு
குமரியில், மலைப்பாதையில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் மண் சரிவால் 3000 தொழிலாளர்கள் தவிப்புக்குள்ளாகினர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ள சேதம் ஏற்பட்டது. மாவட்டத்தில் மலை பகுதிகளான கரும்பாறை, மாறாமலை உட்பட பல்வேறு பகுதிகளிலும், மழை காரணமாக வனப்பகுதியில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து முழுவதுமாக தடைபட்டுள்ளது.
கரும்பாறை எஸ்டேட் பகுதியில் 70க்கும் மேற்பட்ட தனியார் தோட்டங்கள் காணப்படுகின்றன. இங்கு 3000 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது பெய்துள்ள மழை காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன் சாலைகளில் விரிசல், மண்சரிவு அதே போன்று பெரிய பாறைகள் சாலைகளில் விழுந்து காணப்படுவதால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் 10 க்கும் மேற்பட்ட பகுதிகளில் முழுவதுமாக சாலை காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் உள்ளது. இதனால் தற்போது தொழிலாளர்கள் அந்த பகுதிக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களும் தோட்ட உரிமையாளர்களும் அங்கிருந்து வெளியே வரமுடியாத சூழலுக்கும் உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதிகளை மாவட்ட வனத்துறை அலுவலர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா தெரிவித்துள்ளார்.