காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற வாகனம் நிலை தடுமாறியதால் போக்குவரத்து பாதிப்பு
மப்பேடு பகுதியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற போது ராஜகுளம் பகுதியில் நிலை தடுமாறியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் காற்றாலைக்கு இறக்கை எடுத்து செல்லும் நீண்ட லாரி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே ஏறியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரை 6 வழிச்சாலையாக மாற்றம் செய்யும் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதற்காக காஞ்சிபுரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 10 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
மேலும் பெங்களூரில் சுற்றுப்பகுதிகளில் அமைந்துள்ள காற்றாலை தொழிற்சாலைகளுக்கு தேவையான இறக்கைகள் பூந்தமல்லி அருகே இருந்து ஏற்றி செல்லப்படுகிறது. இதற்காக சிறப்பு கனரக வாகனங்கள் போக்குவரத்து குறைவாக உள்ள நிலையில் காவல்துறையினர் அனுமதி பெற்று செல்கின்றனர். இதில் சில சமயம் குறுகலான பாதையில் செல்லும் போது வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில் , திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள காற்றாலைக்கு இறக்கை ஏற்றி செல்லும் 40 அடி நீளம் கொண்ட கனரக லாரி காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் அருகே புதியதாக கட்டப்பட்டும் மேம்பால வளைவுகளை கடந்த போது ஓட்டுநரின் அஜாக்கிரதையால் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே கனரக நீண்ட லாரி எறி இறங்கியது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு புறம் லாரியின் முன்பக்கமும், மறுபக்கம் லாரியின் பின்பக்கமும் தேசிய நெடுஞ்சாலையில் மாட்டிக் கொண்டது. இதனை மீட்க லாரி ஓட்டுநர் பலமுறை முயற்சித்தாலும், லாரி வாகன எடை அதிகம் காரணமாக மேலும் சிக்கியது.
இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் நெடுஞ்சாலைத்துறை அப்பகுதிக்கு உடனடியாக சென்று போக்குவரத்தை மெல்ல மெல்ல சீர் செய்தனர்.
இதனிடையில் வாகனம் மீட்பு பணிக்கான ஆலோசனையில் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் வாகன ஓட்டியிடம் கேட்டறியப்பட்டு அதற்கான பணிகளையும் துவக்கினர். இதனால் சில மணி நேரம் சென்னை பெங்களூர் சாலையில் காஞ்சிபுரம் அருகே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற வாகனங்களை இயக்குவதற்கு முன்பாக சிறிய ரக ஜீப் பாதுகாப்பு பணியில் செல்லும். இந்நிலையில் திடீரென இது போன்ற ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரியால் தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.