மழை நீர் கால்வாய்களில் உள்ள கழிவுகளை அகற்ற எம்எல்ஏ மற்றும் மேயர் அறிவுரை.
காஞ்சிபுரத்தில் நேற்று ஒரு மணி நேரத்தில் 13 சென்டிமீட்டர் மழை பெய்ததில் நகரின் சில பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை ஆய்வு மேற்கொண்டனர்
HIGHLIGHTS
காஞ்சிபுரத்தில் நேற்று இரவு பெய்த கன மழையால் வீடுகள் மற்றும் தெருக்களில் சூழ்ந்த மழைநீர் வெளியேற்றப்படும் பகுதிகளை எம் எல் ஏ எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு மற்றும் மழைநீர் கால்வாய்ளில் உள்ள கழிவுகளை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
தமிழகம் முழுவதும் வரும் நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், நேற்று மாலை காஞ்சிபுரத்தில் திடீரென கருமேகம் சூழ்ந்து ஒரு மணி நேரம் 13 சென்டிமீட்டர் கன மழை பொழிந்தில் சாலைகளில் மழை நீர் வெள்ளை ஆறாக ஓடியது.
பல பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கியும் வீடுகளில் புகுந்து பொதுமக்களுக்கு பெரும் இன்னல்களை அளித்தது.
இதுகுறித்து அறிந்த மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ராஜ் உடனடியாக மாநகராட்சி பொறியாளர் குழுவுடன் அப்பகுதியை ஆய்வு செய்து மின் மோட்டார் மூலம் நீர் இறைக்கும் கால்வாயில் தூர்வாரியும் இரண்டு மணி நேரத்தில் மழைநீர் வடிந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் மேயர் இன்று பாண்டவர் பெருமாள் கோயில் தெரு, சாத்தான்குட்டை தெரு, பாவாதெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மழை நீர் கால்வாய்களில் உள்ள கழிவுகளை அகற்றவும், ஏதேனும் ஆக்கிரமிப்பு இருந்தால் உடனடியாக அகற்றி மழை நீர் செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி பொறியாளர் குழுவிற்கு அறிவுரை வழங்கினர்.
பொதுவாக இது போன்ற மழைக் காலங்களில் மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய்களில் கழிவுகளை அகற்றினாலும் , பொதுமக்கள் மீண்டும் மீண்டும் கழிவுகளை மழை நீர் கால்வாய்கள் மற்றும் சாலைகளில் வீசுவதால் இது போன்று ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும், இது தனக்குத் தானே சிரமங்களை ஏற்படுத்திக் கொள்வதுமாக உள்ளதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் மாநகராட்சி பொறியாளர் குழுவினர், மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி சண்முகம் , திமுக பகுதிக்கு செயலாளர் திலகர், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.