காஞ்சி காமாட்சியம்மன் கோயில் மாசி மக பிரமோற்சவம் நிறைவு
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசிமக பிரம்மோற்சவம் தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவு பெற்றது
HIGHLIGHTS
மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் வருடாந்திர பிரமோற்சவம் இம்மாதம் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினசரி அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாக நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தார்.
நேற்று இரவு வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. இன்று காலையில் கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து லெட்சுமி,சரஸ்வதி தேவியருடன் காமாட்சியம்மன் திருக்கோயில் திருக்குளத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
திருக்குள வளாகத்தில் அஸ்திரதேவிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. இதனைத் தொடர்ந்து அஸ்திர தேவியுடன் கோயில் ஸ்தானீகர்கள் திருக்குளத்தில் நீராடினார்கள்.பின்னர் அம்மன் மீண்டும் ஆலயத்துக்கு எழுந்தருளினார்.
தீர்த்தவாரி உற்சவத்தில் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர்,கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன், ஓரிக்கை மகா பெரியவர் மணி மண்டப நிர்வாக அறங்காவலர் மணி ஐயர், கோயில் மணியக்காரர் சூரியநாராயணன், ஆகியோர் உட்பட ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு திருக்குளத்தில் நீராடினார்கள்.
இரவு கோயில் தங்கக் கொடிமரத்தில் பிரமோற்சவத்தை முன்னிட்டு ஏற்றப்பட்டிருந்த கொடியிறக்கமும் நடைபெற்றதையடுத்து திருவிழா நிறைவு பெற்றது.
இதன் தொடர்ச்சியாக தங்கக் காமகோடி விமானத்தில் காமாட்சி அம்மன் வீதியுலா இன்று வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமை அதிகாலையில் விஸ்வரூப தரிசனக் காட்சியும் நடைபெறுகிறது.