ஸ்ரீ ஜெயேந்திரர் ஜெயந்தி விழாவில் தமிழக ஆளுநர் ரூ. 1 கோடி நன்கொடை
ஸ்ரீ ஜெயேந்திரர் 87வது ஜெயந்தி விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்ரீ சங்கர கிருபா அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவருடைய 87 வது ஜெயந்தி விழா இன்று காஞ்சி சங்கரமடத்தில் காலை முதலே நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பெரியவர் மணி மண்டபத்தில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
இதில் காணொளிகாட்சி வழியாக இந்திய துணை ஜனாதிபதி திரு . வெங்கையா நாயுடு சிறப்புரையாற்றினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் கலந்து கொண்டு ஸ்ரீ ஜெயேந்திர ஜெயந்தி விழாவில் சிறப்புரை ஆற்றினார்.
இதில் ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் கல்வி மருத்துவம் மற்றும் சமுதாயப் பணிகளில் சிறப்பாக பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் , ஸ்ரீ சங்கர கிருபா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு தனது விருப்ப நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி நன்கொடையாக ஸ்ரீ விஜயேந்திர முன்னிலையில் கல்வி அறக்கட்டளை நிர்வாகி களிடம் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து நலிவுற்ற கட்டைக்கூத்து கலைஞர்களுக்கு நிதியுதவி மற்றும் கொரோனா நிவாரண பொருட்கள், சலவை பெட்டி மகளிர்களுக்கு தையல் இயந்திரம் , சமையல் பாத்திர பொருள்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இவ்விழாவில் சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர் , சங்கரா கலைக் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.