காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அனைத்து பகுதிகளிலும் 5 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி இன்று மாலை 5 மணி வரை நடைபெற்றது. இன்று வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் என்பதால் காலை 10 மணி முதல் வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பை அடைந்து 5மணிக்கு நிறைவு பெற்றவுடன் மாநகராட்சியில் கதவுகள் மூடப்பட்டு நிறைவு பெற்றதாக பேனர் வைக்கப்பட்டது.
அனைத்து வார்டுகளில் பதிவு செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் குறித்து கணக்கெடுப்பு எடுத்து அனைத்தும் சரிபார்த்த பின் தலைமை தேர்தல் அலுவலரிடம் ஓப்டைக்கப்பட்டது. கடைசி நாள் என்பதால் காலையில் சற்று பரபரப்பு காணப்பட்டாலும் உணவு இடைவேளைக்கு பிறகு மந்த நிலையே ஏற்பட்டது.
சில வார்டுகளில் மட்டும் ஓரிருவருக்கு டோக்கன் அளிக்கப்பட்டு பெறப்பட்டது. காவல்துறை சீரிய முறையில் பணிகளை மேற்கொண்டதால் அமைதியான முறையில் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.