கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா பணிகளை துவக்கி வைத்த ஆட்சியர், எம்எல்ஏ
வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள விழாவில் கலைஞர் மகளிர் உரிமை தொகை துவக்க விழாவில் முதல்வர் கலந்து கொள்ள உள்ளார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரத்தில் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை துவக்க விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் , எம் எல் ஏ துவக்கி வைத்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த தினம் அன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
இதற்கான விழா நடைபெறும் இடமாக காஞ்சி பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தினை தேர்வு செய்து உள்ளனர். இந்நிலையில் விழா முன்னேற்பாடு பணிகளை துவக்கும் முகமாக இன்று மாலை கால்கோள் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் , காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பூஜைகளுடன் பணிகளை துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண் சமன்படுத்தும் பணி துவங்கி உள்ளது. இதேபோல் பந்தல் அமைக்கும் பணிக்கான பணிகளும் துவங்கியுள்ளது.
சுமார் 200 அடி அகலமும் 500 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்டமான 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பந்தல் அமைக்கப்பட உள்ளது.
மேலும் விழாவிற்கு வரும் விஐபி வாகனங்கள், அமைச்சர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் வாகனங்கள் என பல்வேறு பகுதிகளில் வாகன நிறுத்தமிடமும் அமைக்கப்பட உள்ளது.
மேலும் விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் அடிப்படை தேவைகளான குடிநீர் கழிவறை உள்ளிட்ட வசதிகளையும் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவசண்முகசுந்தரம், உதவி செயற்பொறியாளர் சோமசுந்தரம் , உதவி பொறியாளர் சுந்தரம், காஞ்சி மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சந்துரு, ரவி, கமலக்கண்ணன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்