காஞ்சிபுரம் : நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டம் அமல்
காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டத்தை கலெக்டர், போலீஸ் எஸ்பி அமல்படுத்து உள்ளனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் நகரத்தில் புகழ்பெற்ற கோவில்கள் மற்றும் பட்டு ஜவுளி கடைகள் அமைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான பொதுமக்கள் காஞ்சிபுரம் நகருக்கு வருகை புரிகின்றனர்
இதுமட்டுமில்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தை சுற்றி பல்வேறு தொழில் பூங்காக்கள் மற்றும் குவாரிகள் அமைந்துள்ளதால் கனரக வாகனங்கள் அனைத்தும் காஞ்சிபுரம் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்படுகிறது.
மேலும் பள்ளி நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பேருந்துகள் பேருந்து நெரிசலில் சிக்கி தவிப்பதாக தொடர்புகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட அனைத்து துறை அலுவலர்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதில் அனைத்து வித கனரக வாகனங்கள் தொழிற்சாலை பேருந்துகள் சரக்குகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை காஞ்சி நகருக்குள் வர அனுமதிப்பதில்லை .
நகரின் நான்கு பகுதிகளிலும் புறவழிச்சாலை அமைந்துள்ளதால் தொழிற்சாலை பேருந்துகள் , கனரக வாகனங்கள் இதனை பயன்படுத்த அறிவுறுத்தப்படும்.
தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வசதியாக பெரியார் நகர் , ஓரிக்கை , செவிலிமேடு, கீழம்பி, பொன்னேரியில் கரை ஆகிய இடங்களில் தொழிலாளர்களை ஏற்றி , இறக்கும் வகையிலும், அந்தப் பகுதிகளில் இருசக்கர வாகன நிறுத்த வசதிகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தொழிற்சாலை மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும், இது குறித்த விளக்கக் கூட்டங்களை நடத்த சிப்காட் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் இந்த நடைமுறையை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.