காஞ்சிபுரத்தில் 91 வாகனங்களுக்கு ரூ. 9 லட்சம் அபராதம் விதிப்பு
.காஞ்சிபுரத்தில் 91 வாகனங்களுக்கு ரூ. 9 லட்சம் அபராதத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் விதித்து உள்ளார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகும் இதற்கு காரணமாக கனரக வாகனங்கள் ஆட்டோக்கள் மற்றும் கல்லூரி பேருந்துகள் என பொதுமக்கள் அவ்வப்போது மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு கூட்டத்தில் இதுகுறித்து ஆட்சியர் காஞ்சிபுரம் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளருக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
இதனையடுத்து காஞ்சிபுரம் வட்டரபோக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் அக்டோபர் 2022-ம் மாதம் காஞ்சிபுரம், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சுமார் 1050 வாகனங்களை தணிக்கை செய்து 91 வாகனங்களுக்கு மோட்டார் வாகன விதிகளை மீறியதாக கூறி அபராதம் விதித்தார்.
இதில் ரூபாய் 3,35,000/- (மூன்று லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம்) உடன் இணக்கக்கட்டண வசூலாகவும் (ஸ்பாட் பைன்), ரூபாய் 5,62,300/- (ஐந்து லட்சத்து அறுபத்து இரண்டாயிரத்து முன்னூறு) இணக்கக்கட்டணம் மற்றும் வரி வசூல் இலக்காகவும் நிர்ணயம் செய்தும் ஆக மொத்தம் ரூபாய் 8,98,300/- (எட்டு இலட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து முன்னூறு) அபராதத்தை அரசுக்கு ஈட்டி கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதில் 14 வாகனங்கள் தகுதிச்சான்று (எப்.சி), அனுமதிசீட்டு (பெர்மிட்), சாலைவரி (ரோடு டாக்ஸ்) போன்ற குற்றங்களுக்காக சிறை பிடிக்கப்பட்டு அருகேயுள்ள காவல் நிலையங்கள் மற்றும் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திலும் நிறுத்தப்பட்டது.
தணிக்கை அறிக்கை வழங்கப்பட்ட 91 வாகனங்களில் கீழ்க்கண்ட குற்றங்கள் குறிப்பிடப்படக்கூடியவையாகவும் சாலை பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாகவும் குறிப்பிடலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றியது – 07, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 17, பின்புறம் பார்க்கும் கண்ணாடிகள் இல்லாமல் இயக்கியது – 34, சீட்பெல்ட் அணியாமல் பயணித்தது – 27, கண் கூசச்செய்யும் முகப்பு விளக்கு பொறுத்தி இயக்கியது – 17,தலைகவசம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 12,காப்புசான்று இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 17, தகுதிச்சான்று இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 11, முறையற்ற நம்பர் ப்ளேட் கொண்ட வாகனத்தை இயக்கியது – 8, சீருடை இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 16
அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை ஒருங்கிணைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விளக்க வகுப்புகளை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 300 நபர்களுக்கும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் திருமலை பொறியியல் கல்லூரியில் 200 பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு ஒலி & ஒளி படக்காட்சி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
மேலும் மோட்டார் வாகன விதிகள் மீறி வாகனங்களை செலுத்த வேண்டாம் எனவும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தங்கள் உயிர் பாதுகாப்பிற்கு கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் அவ்வப்போது நகரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் மோட்டார் வாகன ஆய்வாளர் மேற்கொண்டு வருவதும் , இதேபோல் நகரில் ஆட்டோக்களை முறைப்படுத்தி வரும் செயலுக்கும் பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.