கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதி வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் நடைபெருவரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார்
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட இராஜா நகர், நகராட்சி மயானம், விநாயகர் நகர் மற்றும் ஏமப்பேர் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என். ஸ்ரீதர் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது, இராஜா நகர் பூங்காவில் பணிகளை விரைந்து முடித்திடவும் தேவையற்ற களைச் செடிகளை அகற்றிடவும் பூங்கா அருகாமையில் உள்ள கழிவறைகளை சுத்தமாக பராமரித்திடவும் கூறினார். பின்னர் புதியதாக கட்டப்பட்டு வரும் யோகா மையத்தினை ஆய்வு செய்தார்.
பின்னர், தியாகதுருகம் சாலையில் உள்ள நகராட்சி மயானத்தின் வெளிப்புறம் அமைக்கப்பட்டுவரும் சாலையோர பூங்கா பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் பணிகளை விரைந்து முடித்திட கூறினார். மைதானத்தின் உட்புறம் இறுதி சடங்கு செய்ய வரும் பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட உத்தரவிட்டார்.
தொடர்ந்து, விநாயகர் தெரு பகுதியில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை ஆய்வு செய்து, முறையான வடிகால் வசதியை ஏற்படுத்திடவும் கூறினார். விநாயகர் நகரில் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட காலி மனைகளில் நடைபயிற்சி பாதையுடன் கூடிய பூங்காக்களை ஏற்படுத்திடவும், கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதிகளில் நடை பயிற்சியுடன் கூடிய பூங்காக்கள் அதிகமாக ஏற்படுத்திடவும் நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, ஏமப்பேர் குளப்பகுதியில்நடைபயிற்சி பாதை, பூங்கா அமைக்கும் பணி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.