ஜாதிய வன்கொடுமை: அதிமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை கோரி புகார்
ஜாதிய வன்கொடுமையில் ஈடுபடும் அதிமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏரியூர் ஒன்றிய குழு தலைவர் புகார்.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அதிமுக ஏரியூர் ஒன்றிய குழு தலைவராக இருப்பவர் பழனிச்சாமி. இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். அதே ஒன்றிய குழு துணைத் தலைவராகவும்,ஏரியூர் ஒன்றிய அதிமுக செயலாளராகவும் இருந்து வருபவர் தனபால். இந்நிலையில் தனபால் தன்னை சாதி பெயரை கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:
ஏரியூர் ஒன்றிய குழு துணைத் தலைவர் தனபால், பழனிச்சாமி ஆகிய என்னை சாதிப்பெயரை சொல்லி திட்டி தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். அலுவலகத்திற்குள் நுழைய கூடாது. அவ்வாறு நுழைந்தால் கொன்று விடுவேன். பின்பு ஒன்றிய செயலாளர் தனபாலின் தந்தை கோவிந்தராஜ், தன்னை வீட்டிற்கு அழைத்து காலால் எட்டி உதைத்து அடித்து துன்புறுத்தினார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் உள்ள இருக்கையில் உட்கார கூடாது என மிரட்டினார்.
அரசு கொடுத்துள்ள வாகனத்தில் நீ செல்லக்கூடாது, அதனை எனக்குத்தான் சொந்தம் என்று கூறி, அதையும் மீறி நீ சென்றால் ஜே.சி.பி, விட்டு உன்னை ஏற்றிக் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளார். என்னுடைய அலுவலகத்திற்குச் சென்று பீரோவில் வைத்திருந்த காசோலைகளை திருடிச் சென்று பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார்கள். என்னுடைய கையெழுத்திட்ட வெற்று பத்திரம் திருடு போய்விட்டது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் அவர்களிடத்தில் தொலைபேசி மூலம் நடந்த சம்பவத்தை கூறும் பொழுது, முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் ஏரியூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனபால் கூறுவதை கேட்டு அவர் வழியில் நீ நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இதுகுறித்து பலமுறை அவரிடம் முறையிட்டேன். ஆனால் அவர் ஒன்றிய செயலாளர் தனபாலுக்கு சப்போர்ட்டாக உள்ளார்.
ஆகவே என்னை சாதிப் பெயரைச் சொல்லி அசிங்கமாகவும் கேவலமாகவும் பேசியதும், என்னையும் என் குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய கோவிந்தராஜ், தனபால், ஆகியோர் மீது எஸ்சி எஸ்டி ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதேபோல் என்னுடைய காசோலைகளை திருடியவர்கள் மீதும் அவருக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீதும் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறும் இந்த சம்பவத்துக்கு பின்புலமாக உள்ளவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்தார். இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அதிமுக ஏரியூர் ஒன்றிய குழு தலைவர் பழனிசாமி அளித்துள்ளார்.