தர்மபுரியில் கட்டிட தொழிலாளர்கள் மாவட்ட குழு கூட்டம்
தர்மபுரியில் கட்டிட தொழிலாளர்கள் மாவட்ட குழு கூட்டம்
HIGHLIGHTS
கட்டிட தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ 6 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியூசி தருமபுரி மாவட்ட கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இச்சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் குழந்தைவேலு தலைமையில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில துணை பொது செயலாளர் முனுசாமி,கட்டட சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.சுதர்சனன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.சி,மணி, ஏஐடியூசி தருமபுரி மாவட்ட பொது செயலாளர் கே.மணி, மாவட்ட துணைத் தலைவர் நடராஜன்,ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருடம் ரூ 1800 உதவி தொகை வழங்க வேண்டும். பட்டப்படிப்பு படிக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வருடம் ரூ10 ஆயிரம் வழங்க வேண்டும். தொழில்நுட்பக் கல்வி மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணத்தை வழங்க வேண்டும்.
60 வயதை கடந்த தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ 6 ஆயிரம் வழங்க வேண்டும்.இயற்கை மரணத்திற்கு ரூ5லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ10 லட்சமும் வழங்க வேண்டும்.மகப்பேறு கால உதவி தொகை ரூ30 ஆயிரமாகவும்,திருமண உதவி தொகை ரூ 50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கவேண்டும்.நல வாரியத்தில் கனிணி வழி பதிவு, புதுபித்தல்,கேட்பு மனு அளித்தல் உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்தவும்,எளிமைபடுத்தவும் வேண்டும்.
சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் 1000 பேர் கலந்து கொள்வது எனவும், வரும் செப்டம்பர் 11- ந் தேதி திருச்சியில் கட்டட சங்கத்தின் கட்டுமான பெண் தொழிலாளர்கள் மட்டும் கலந்து கொள்ளும் மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்டட சங்க மாவட்ட பொருளாளர் விஜயா, உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் என்.மனோகரன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் கே.பி.கந்தசாமி,தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் வணங்காமுடி, நிர்வாகி ராமன் மற்றும் கட்டட சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.