கடலூரில் புழுங்கல் அரிசி புழு அரிசி ஆனதால் ரேஷன் கடையை மக்கள் முற்றுகை
கடலூரில் பழுங்கல் அரிசி புழு அரிசியாக மாறியதால் ரேஷன் கடையை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் ஆனைக்குப்பம் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச புழுங்கல் அரிசியில் வண்டுகள் மற்றும் புழுக்கள் இருந்ததாக கூறி ஆவேசமடைந்த பெண்கள் நியாயவிலை கடையை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அங்கு வந்த கடலூர் புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் கடையில் விசாரணை நடத்தி பொதுமக்களை சமாதானம் செய்தனர்.மேலும் தரமான அரிசிகளை வழங்கவும் அவர்கள் தெரிவித்துவிட்டு சென்றனர்.இருப்பினும் 1600 ரேஷன் கார்டுகள் உள்ள இப்பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற புழுக்கள் நிறைந்த அரசிகள் வழங்கப்படுவதால் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
மழைக்காலத்தில் நியாயவிலை கடைகளில் தண்ணீர் உட்புகுந்து அரிசிகள் சேதமடைந்து விடுவதால் பொது மக்களுக்கு விநியோகிக்க முடியாத நிலை உள்ளதாகவும் கடை தரப்பில் ஊழியர்கள் தெரிவித்தனர்.