ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்
HIGHLIGHTS
தமிழகத்தில் தற்போது கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இன்று காலைமுதல் 14 நாட்களுக்கு முழு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில் முதல் நாளான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சென்னையின் நுழைவாயிலான செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை பெரிய வணிக நிறுவனங்கள் தொடங்கி சிறிய கடைகள் வரைக்கும் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.
பொது போக்குவரத்தை பொறுத்தவரை முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பரனூர் சுங்கச்சாவடி மையங்கள் அனைத்தும் வாகன போக்குவரத்து ஏதும் இல்லாமல் இருந்தன.
இருப்பினும் செங்கல்பட்டு வழியாக பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மிககுறைவாக தான் இருந்தது. சுங்கச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். இதில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்ததாக 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீசார் நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பினர்.