ஓவியம் வரைந்து அசத்தும் தொழுநோயாளிகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கை கால் விரல்களை இழந்தும், நம்பிக்கையை இழக்காத தொழுநோயாளிகள் ஓவியம் தீட்டி மகிழ்கின்றனர்.
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற சுவாமி சுந்தரபாரதி 1942ம் ஆண்டு அன்பு தொண்டு நிலையத்தை செங்கல்பட்டில் துவக்கினார். இந்நிலையம் சார்பில் அரசு நிதியுதவியுடன் முதியோர் இல்லம் துவங்கப்பட்டது. இந்த இல்லத்தில் 42 தொழுநோயாளிகள் தங்கியுள்ளனர். வாழ்க்கையின் பெரும்பகுதியை கடந்துவிட்ட பின் மீதி காலத்தை கழிப்பதற்கு வழி தெரியாமல் தங்கள் கை, கால் விரல்களை இழந்து தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு மனதில் மகிழ்ச்சியை விதைப்பதற்காகவே, அப்பகுதியில் ஓவியப்பள்ளி துவக்கப்பட்டது.
இங்கு, 15 தொழுநோயாளிகள் ஓவியம் தீட்டி மகிழ்கின்றனர். இவர்களுக்கு ஒரு ஓவியத்தை வரைய குறைந்தது 5 நாட்கள் ஆகும் எனவும் இவர்களுக்கு, ஒரு மாதத்துக்கு 1200 ரூபாய் சன்மானமாக வழங்கப்படுகிறது. மேலும் எவ்வளவு ஓவியங்கள் விற்கப்படுகிறது என்ற அடிப்படையில் வருடம் தோறும் அதில் 30 சதவிகித பணமும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. கை, கால் விரல்களை இழந்தவர்கள் முடங்கி போய்விடாமல், மகிழ்ச்சியை ஏற்படுத்துவது மனமே என்பதை உணர்த்தும் வகையில், தங்களின் எண்ணங்களை ஓவியங்களாக தீட்டி மகிழ்கின்றனர்.