நக்கம்பாடி ஊராட்சிமன்றத் தலைவரை கண்டித்து ஊராட்சிஒன்றிய அலுவலகம் முற்றுகை
தங்கள் வார்டு வேலையில் அடுத்த வார்டை சேர்ந்தவர்களை அனுமதிப்பதாகக் கூறி செந்துறை ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், நக்கம்பாடி கிராமத்தில் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் அடுத்த வார்டை சேர்ந்த மக்களை ஊராட்சி மன்றத் தலைவர் அனுமதிப்பதாக குற்றம்சாட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்தில் 9 வார்டுகள் உள்ளன. இவ்வூரில் நடைபெறும் நூறு நாள் வேலைத்திட்டத்தில், ஒரு வார்டுக்கு ஒரு வாரம் என பிரித்து வேலை வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முதல், 5 வார்டு சிவன்கோவில் தெரு பொதுமக்கள் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் புதுஏரியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி பரமசாமி, தனக்கு வேண்டப்பட்ட மற்ற வார்டுகளில் உள்ள 20 பேரை, புது ஏரியை தூர்வாரும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.
இதனால் 5ஆவது வார்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போவதாகவும், தங்களை மற்ற வார்டுகளில் உள்ள வேலைகளின்போது வேலை வழங்காதபோது, தங்கள் வார்டு வேலையில் அடுத்த வார்டை சேர்ந்த மக்களை அனுமதிப்பதாக குற்றம்சாட்டி, செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 5 வார்டு பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவயிடத்திற்க்கு வந்த போலீசார், பொது மக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.