சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது
ஜெயங்கொண்டம் அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பா குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைப்பு.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்த டேவிட் (எ) செந்தமிழ்ச்செல்வன் (கூலி தொழிலாளி). இவர் தனது வீட்டிற்கு விருந்துக்காக வந்திருந்த மனைவியின் அக்கா மகளான 8 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுபா விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் குடிபோதையில் இருந்ததாகவும், அதனால் குடிபோதையில் இவ்வாறு செய்ததாக ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து செந்தமிழ்செல்வனை ஜூலை 8-ம் தேதி போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, செந்தமிழ்ச்செல்வனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான நகல் செந்தமிழ்ச்செல்வனிடம் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே போக்சோவில் கைதான அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.