விபத்து இழப்பீடு வழங்காததால் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்ட அரசு பஸ்!
அரியலூரில், விபத்து இழப்பீடு தொகை 2லட்சத்து 62 ஆயிரம் வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் தத்தனூர் அருகே வடக்கு கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், 2013ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி, பொட்டகொல்லை கிராமத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில், சதீஷ்குமார் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்த வழக்கு விசாரணை, அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. காயமடைந்த சதீஷ்குமாருக்கு, 3 லட்சத்து 24 ஆயிரம் இழப்பீடு தொகை தர வேண்டும் என்று, 2014ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்திரவிட்டது.
ஆனால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சார்பில், இழப்பீடு தொகையில், ஒரு லட்சத்துத்து முப்பதாயிரம் கட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இதனையடுத்து, 2 லட்சத்து 62 ஆயிரத்து 753 இழப்பீடு தொகை வழங்காததால், அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சுமதி, அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்த விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த அரசு பேருந்தை, நீதிமன்றப் பணியாளர்கள் ஜப்தி செய்து அரியலூர் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர்.