ஊரக வளர்ச்சித்துறை வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர்
ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.23.60 இலட்சம் மதிப்பீல் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், தா.பழுர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி அரியலூர் மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் பொதுமக்களின் தேவை அறிந்து வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டம், தா.பழுர் ஊராட்சி ஒன்றியம், வெண்மான்கொண்டான் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டார்.
இதில் வெண்மான்கொண்டான் ஊராட்சியில் வெண்மான்கொண்டான் மூப்பன் கொட்டகை தெருவில் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார்சாலைப் பணியையும், வெண்மான்கொண்டான் பள்ளிக்கூடத் தெருவில் மாவட்ட ஊராட்சி 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறு பாலம் கட்டுமான பணியையும், 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.6.40 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிப் பணியையும், வடகடல் மற்றும் வெண்மான்கொண்டான் கிராமங்களில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று தனிநபர் வீடுகள் கட்டுமான பணியையும் என மொத்தம் ரூ.23.60 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி பார்வையிட்டார்.
இப்பணிகளைப் பார்வையிட்டு தார்சாலை பணிகளில் சாலையின் இருபுறமும் மழைநீர் செல்லும் வகையில் வரத்து வாரிகளை சீரமைக்கவும், பொதுமக்கள் செல்லும் வகையில் பாலத்தின் உயரத்தை சரி செய்யவும், தனிநபர் இல்லக் கட்டுமானப் பணிகளை முறையாக மேற்கொள்ளவும் மேலும் முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களைக்கொண்டு கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின்போது ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.