ஏரியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம் உஞ்சினி கிராமத்தில் ஏரியில் தவறிவிழுந்த மூன்று குழந்தைகளில் ஒரு சிறுமி உயிரிழந்தார். மீதமுள்ள இரண்டு குழந்தைகளை பொதுமக்கள் உயிருடன் மீட்டனர்.
அரியலூர் மாவட்டம் உஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜான்சிராணி. இரண்டு குழந்தைகளுடன் உஞ்சினியில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறம் சமாதிகுட்டை என்ற சிறியஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் கரைகளில் அப்பகுதியில் உள்ள குழந்தைகள்,சிறுவர்,சிறுமியர்கள் ஒன்று சேர்ந்து விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏரிக்கரையில் குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடி கொண்டிருந்த போது, ஜெயராமனின் மகள் ஹன்சிகா(6)வுடன் அப்பகுதியை சேர்ந்த ராஜபிரகதி (6) மற்றும் குணபிரியன் (3) ஆகிய மூன்று பேர் ஏரியின் படிக்கட்டில் இறங்கி விளையாடியுள்ளனர். அப்போது படிக்கட்டில் படர்ந்திருந்த பாசி வழுக்கியதில் மூன்று பேரும் தவறி ஏரியில் விழுந்துள்ளனர். தண்ணீரில் தத்தளித்த சிறுவர்,சிறுமி எழுப்பிய சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து அவர்களை மீட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஹன்சிகா உயிரிழந்தார். ராஜபிரகதி, குணபிரியன் 2 பேரும், செந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தனர். இச்சம்பவம் குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.