டென்மார்க்கில் பிரபாகரனுக்கு மே 18ல் நடத்தப்படும் வீர வணக்க கூட்டம்

டென்மார்க்கில் பிரபாகரனுக்கு மே 18ல் நடத்தப்படும் வீர வணக்க கூட்டம்

விடுதலைபுலிகள் இயக்க தலைவர் பிரபாகரன்.

டென்மார்க்கில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மே 18ல் வீர வணக்க நாள் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை அவரது சகோதரரான மனோகர் உறுதி செய்துள்ளார். அதோடு பிரபாகரன் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட மே 18 ம் தேதி அவருக்கு டென்மார்க்கில் வீரவணக்கம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். பிரபாகரன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்று பல்வேறு தரப்பினர் கூறி வரும் நிலையில் இத்தகைய மோசடிகளை தடுக்கவே வீரவணக்கம் நிகழ்ச்சி நடத்துவதாக அவர் அறிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவராக இருந்தவர் பிரபாகரன். இலங்கையில் தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடினார். இலங்கை அரசுக்கு எதிராக தனியாக படையை உருவாக்கி செயல்பட்டு வந்தார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது.

2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை கைவிட்டது. அதோடு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அந்த இயக்கமே அழிக்கப்பட்டது. இந்த யுத்தத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தார் எனவும் அறிவிக்கப்பட்டது. அதாவது 2009 மே மாதம் 18 ம் தேதி பிரபாகரன் மரணடைந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்தது. அதோடு பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரனும் மரணமடைந்தனர். இதில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட போட்டோக்கள் வெளியாகி இருந்தன.

ஆனாலும் கூட தொடர்ந்து பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் மரணிக்கவில்லை. வெளிநாடுகளில் அவர்கள் உயிர் வாழ்கின்றனர் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட பழ நெடுமாறன் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பிரபாகரன் 2009ல் இலங்கை இறுதி யுத்தத்தில் மரணமடைந்ததாக கூறினாலும் கூட அவருக்கு நினைவஞ்சலி, வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் நடத்தப்படவில்லை.

பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாலேயே இது நடத்தப்படாமல் உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் தான் முதல் முதலாக பிரபாகரன் குடும்பத்தில் இருந்து அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் வீரவணக்க நினைவு கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரபாகரனின் அண்ணன் மனோகர் டென்மார்க்கில் உள்ளார். அவர் தான் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்துக்கு வீரவணக்கம் நினைவு கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: ‛‛வரும் மே 18 ம்தேதி என் தம்பி பிரபாகரன், மைத்துனி மதிவதனி, குழந்தைகள் துவாரகா, பாலச்சந்திரன் உள்ளிட்டோருக்கு வீரவணக்கம் நினைவு கூட்டம் நடத்த உள்ளேன். டென்மார்க்கில் நான் இருக்கும் இடத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. எனது தம்பியும், அவரது குடும்பமும் இலங்கை இறுதி யுத்தத்தில் தங்களின் மண்ணுக்காக உயிர் தியாகம் செய்துள்ளனர்.

ஆனால் பிரபாகரன் பெயரை பயன்படுத்தி இப்போது மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோசடி கும்பலை இனம்கண்டு பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும். பிரபாகரனின் வீரவணக்கம் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்'' என கூறியுள்ளார். இந்த வீரவணக்கம் கூட்டம் என்பது பிரபாகரன் இறந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்த மே 18 ம் தேதியிலேயே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story