மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் சிருங்கேரி நரசிம்மபாரதீ சுவாமி பாதுகை பிரதிஷ்டை

namakkal news, namakkal news today- மோகனூர், ஸ்ரீ அசல தீபேஸ்வரர் கோயிலில், சிருங்கேரி சாரதா பீட சச்சிதானந்த சிவா அபிநவ நரசிம்மபாரதீ சுவாமிகளின் பாதுகை பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

Update: 2023-03-18 11:45 GMT

namakkal news, namakkal news today- மோகனூர், ஸ்ரீ அசலதீபேஸ்வரர் கோயிலில், சிருங்கேரி சாரதாபீட நரசிம்ம பாரதீ சுவாமி பாதுகை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரியாற்றின் கரையில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, சுவாமி, மதுகரவேணி சமேதராக எழுந்தருளி காவிரியாற்றை பார்க்கும் வகையில், மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள தீபம், எந்த புயல் காற்றிலும் அசையாமல் சீராக எரிவது குறிப்பிடத்தக்கது. அதனால், இங்கு எழுந்தருளியுள்ள சுவாமிக்கு, ஸ்ரீ அசலதீபேஸ்வரர் என பெயர் விளங்கி வருகிறது. தேவாரப்பாடல் பெற்ற இத்திருத்தலமான இக்கோயில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. கி.பி., 1,454ல், புனர் நிர்மாணம் செய்யப்பட்டதாக, இக்கோயில் பற்றிய வரலாறுகள் கூறுகின்றன.

இங்கு ஏற்கனவே, கர்நாடகா மாநிலம், சிருங்கேரி சாரதாபீடம், 33வது பட்டம் சச்சிதானந்த சிவா அபிநவ நரசிம்மபாரதீ சுவாமியின் பாதுகை மற்றும் சிலை அமைக்கப்பட்டிருந்தது. கோயில் கும்பாபிசேக விழாவிற்காக திருப்பணிகள் செய்யப்பட்டபோது, சன்னதிகள், பரிவாரங்கள் புதுப்பிக்கப்பட்டன. அப்போது, சிருங்கேரி சுவாமிகளின் பாதுகை மற்றும் சிலை (சிலாரூபம்) அகற்றப்பட்டு, அங்கு சதாசிவ பிரம்மேந்திரர் சன்னதி மற்றும் பாதுகை ஏற்படுத்தப்பட்டது. அதைக் கண்ட சிருங்கேரி சாரதா பீட பக்தர்கள், கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர். இந்து சமய அறநிலையத்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் சிருங்கேரி சுவாமிகளின் சன்னதி மற்றும் அது தொடர்புடைய பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயத்தை மறைத்ததாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயில் வளாகத்தில், நரசிம்ம பாரதீ சுவாமிகள் பாதுகை மற்றும் சிலாரூபம் கொண்ட சன்னதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிருங்கேரி சாரதாபீட நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, இந்து சமய அறநிலையத்துறை அதற்கு அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து, ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதீ சுவாமிகளின், 165வது ஜெயந்தி நாளான இன்று, புனிதமான பாதுகை விஸ்தாரமாக பூஜையும், அஷ்டோத்திர அர்ச்சனையும் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிருங்கேரி சாரதா பீட தர்மாதிகாரி ராமநாதன் நிகழ்ச்சிக்கு விழாவுக்கு தலைமை வகித்தார். மகாதானபுரம் பண்டிட் சுந்தரசர்மா, புனிதநீரை ஊற்றி, பாதுகையை பிரதிஷ்டை செய்து வைத்தார். கரூர் மாவட்டம், மகாதானபுரம் ராஜாராம், நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு மாவட்டம் என, பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, பாதுகை நிர்மானக்குழு தலைவர் அஜிதன், செயலாளர் சுப்ரமணியன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News