குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியில் 15 ம் தேதி கல்லூரி கனவு சிறப்பு முகாம்
Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கல்லூரி கனவு சிறப்பு முகாம்கள் வருகிற 13ம் தேதி புதுச்சத்திரத்திலும், 15ம் தேதி பாச்சலிலும் நடைபெறுகிறது.
Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கல்லூரி கனவு சிறப்பு முகாம்கள் வருகிற 13ம் தேதி புதுச்சத்திரத்திலும், 15ம் தேதி பாச்சலிலும் நடைபெறுகிறது.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழக முதல்வரால், நான் முதல்வன் திட்டம் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி துவக்கப்பட்டது. பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்கல்வியில் சேரவும், உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தர வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். வருகிற 13ம் தேதி புதுச்சத்திரம் அருகே உள்ள பாவை கல்லூரியிலும், 15ம் தேதி குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியிலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், 2023-24 கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதி 8,061 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேருவதற்கு வழிகாட்டும் வகையில், உயர்கல்வியின் முக்கியத்துவம், எந்தெந்த உயர்கல்வி துறைகள் உள்ளது அதில் எந்தெந்த துறைகளை தேர்ந்தெடுப்பது, அதற்குரிய வேலை வாய்ப்புகள், உயர்கல்விக்கு கிடைக்கும் கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி கடன் வசதி சார்ந்த தகவல்கள் குறித்தும் தகவல்கள் தெரிவிக்கப்பட உள்ளது.
முகாமில், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசகர் சுப்பிரமணியன், ஆசான் கல்வி அறக்கட்டளையின் முதன்மை அலுவலர் தொல்காப்பிய அரசு மற்றும் நாமக்கல் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் குமரவேல் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்தும், திருச்செங்கோடு ஆர்டிஓ சுகந்தி மற்றும் திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் ஆகியோர் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் பேச உள்ளனர்.
இதில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு கையேடு வழங்கப்பட உள்ளது. மேலும் மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். இம்முகாமில் அனைத்து அரசு கலைக் கல்லூரிகள், அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, திறன் மேம்பாட்டு கழகம், வங்கி துறை, ஆகிய துறைகளின் சார்பில் உயர்கல்வி சார்ந்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் விண்ணப்பிக்கவும், வருமான வரித்துறை பேன் அட்டை பெறவும் இ -சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. மாணவ, மாணவிகள் தங்கள் ஆதார் அட்டை, 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் எடுத்து வந்து விண்ணப்பித்து கொள்ளலாம். முகாமில் பிளஸ் 2 முடித்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.