தங்கள் பகுதி கிராம பஞ்சாயத்தா, டவுன் பஞ்சாயத்தா?: கிராம மக்கள் சாலை மறியல்

மணியங்காளிப்பட்டி புதுக்காலனி கிராம பஞ்சாயத்திற்கு சேர்ந்ததா, டவுன் பஞ்சாயத்திற்கு சேர்ந்ததா என கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-19 11:15 GMT

மோகனூர் அருகே, தங்கள் பகுதி, கிராமமா, டவுன் பஞ்சாயத்தா என்று தெரியாமல் குழப்பமடைந்த பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், பேட்டப்பாளைம் கிராம பஞ்சாயத்தில், ஆர்.சி.பேட்டப்பாளையம், கீழப்பேட்டப்பாளையம், புதுத்தெரு, சர்க்கரை ஆலை காலனி, கிராயூர், பனைமரத்துப்பட்டி, மணியங்காளிப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்தில், குடிசை மற்றும் வீடு கட்டி வசித்து வரும் பகுதி மணியங்காளிப்பட்டி புதுக்காலனியாக மாறியுள்ளது. பஞ்சாயத்து சார்பில், மொத்தம் ரூ. 21 லட்சம் மதிப்பில், மழைநீர் வடிகால், கழிவுநீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கப்பட்டது. அங்கு குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், மோகனூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், அங்குள்ள மக்களில் சிலருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மணியங்காளிப்பட்டி புதுக்காலனி, மோகனூர் டவுன் பஞ்சாயத்து முதல் வார்டுக்கு உட்பட்டது எனக் கூறி வருகிறது. அதற்காக டவுன் பஞ்சாயத்து சார்பில் குடிநீர் பைப் லைனும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில், மணியங்காளிப்பட்டி புதுக்காலனி, பேட்டப்பாளையம் பகுதி மக்கள் பேட்டப்பாளையம் பஞ்சாயத்து பகுதியில், பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஓட்டுப்போட்டனர். இந்த காலனி பஞ்சாயத்திற்கு உட்பட்டதா, மோகனூர் டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்டதா என்ற எல்லை பிரச்னை இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதனால், வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்ட எந்த வரியும் செலுத்த முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பல்வேறு அதிகாரிகளிடம் மாறி மாறி கோரிக்கை மனு அளித்தும், இதுவரை இப்பிரச்சினைக்கு எவ்வித முடிவும் எட்டவில்லை. அதனால், ஆவேசம் அடைந்த கிராம மக்கள், இன்று காலை 11 மணிக்கு, மோகனூர் - ப.வேலூர் மெயின் ரோடு, வள்ளியம்மன் கோயில் அருகில் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த தாசில்தார் தங்கராஜூ மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வாரத்தில், சர்வேயர் மூலம் எல்லை அளவீடு செய்யப்பட்டு, குடியிருப்புகள் டவுன் பஞ்சாயத்து எல்லையை சார்ந்ததா அல்லது கிராம பஞ்சாயத்து எல்லையை சார்ந்ததா என்று முடிவு செய்து, அந்த நிர்வாகத்தின் மூலம் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று கூறினர். அதைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News