எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் திடீர் ரத்து: கட்சியினரிடையே பரபரப்பு

எருமப்பட்டியில் இன்று நடைபெற இருந்த ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தல் திடீரென ஒத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-10-22 06:30 GMT

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி.

நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்த ஒன்றியத்தில் ஏற்கனவே ஒன்றியக்குழு தலைவராக இருந்து அதிமுகவைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் வெற்றிபெற்றார். தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்ற இடங்களில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று 22ம் தேதி நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுவில் மொத்தம் 15 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இவற்றில் தற்போதுள்ள நிலையில் 8 உறுப்பினர்கள் அதிமுகவிலும், பாஜக ஒருவரும், சுயேச்சை ஒருவரும், திமுகவைச் சேர்ந்தவர்கள் 5 பேரும் உள்ளனர்.

தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற இருந்த நிலையில், அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்களைக் காணவில்லை. அவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று பொதுமக்கள் போலீசில் புகார் செய்துள்ளதாகவும், அதனால் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க இன்று நடைபெற இருந்து தேர்தல் கலெக்டர் உத்தரவுப்படி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தங்களிடம் 10 உறுப்பினர்கள் இருப்பதால் தலைவர் பதவியை மீண்டும் பிடித்துவிடலாம் என்று அதிமுகவினர் உற்சாகமாக இருந்தனர். இந்த நிலையில் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியைப் பிடிக்க திமுக சார்பில் அதிமுக கவுன்சிலர்களை இழுக்க குதிரை பேரம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதால், எருமப்பட்டி பகுதியில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிமுக உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் பாஜக சுயேச்சை வேட்பாளர் உள்ளிட்ட 10 பேரையும் செய்தியாளர்கள் முன்னிலையில், அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி ஆஜர் படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் அதிமுக கவுன்சிலர்களை கடத்தி வைத்ததாக என் மீது போலீசில் பொய் புகார் கொடுத்துள்ளனர். புகார் கொடுத்தவர் யார் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. யாரையும் நான் கடத்தி வைக்கவில்லை. தேர்தல் நடத்துமாறு மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். தேர்தல் நடத்தாவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடருவோம். நாமக்கல் மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்றார்.

இந்த சந்திப்பில் முன்னாள் எம்எல்ஏக்கள் நாமக்கல் பாஸ்கர், திருச்செங்கோடு சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News