தென் ஆப்பிரிக்காவில் உயிரிழந்த கணவர்: அரசு உதவ மனைவி கோரிக்கை

தென் ஆப்பிரிக்காவில் இறந்த ரிக் வண்டி டிரைவர் உடலை தமிழகம் கொண்டுவர அரசு உதவ வேண்டும் என கலெக்டரிடம் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-05-08 13:00 GMT

பைல் படம்.

தென் ஆப்பிரிக்காவில் இறந்த, ரிக் வண்டி டிரைவரின் உடலை ஊருக்கு கொண்டு வர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி நாமக்கல் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

இது குறித்து, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பட்டத்தையன்குட்டையை சேர்ந்த மீரா (29), என்பவர், நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், நான் பட்டத்தையன்குட்டை கிராமத்தில், 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். என் கணவர் சங்கர் (40), திருச்செங்கோட்டில் உள்ள ஒரு ரிக் வண்டியில் டிரைவராகவும், டிரில்லராகவும் பணியாற்றி வந்தார்.

அந்த போர்வேல் நிறுவனம், தென் ஆப்பிரிக்காவில் உள்ள ரிக் வண்டிக்கு, என் கணவரை வேலைக்கு அழைத்துச்சென்றது. அதற்காக மாதம் ரூ. 50 ஆயிரம் சம்பளம் தருவாக கூறினர். 3 மூன்று மாதம் பிரச்னை இல்லாமல் இருந்தது. 20 நாட்களுக்கு முன், என் கணவர் சங்கர், தொலைபேசியில் பேசியபோது, எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை.

உரிமையாளரிடம் பேசி என்னை ஊருக்கு அனுப்ப சொல் என்று கூறினர். நான் ரிக் வண்டி உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்து, என் கணவரை ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று கூறினேன். இந்த நிலையில் கடந்த 6ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் தென் ஆப்பிரிக்காவில் எனது கணவர் சங்கர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

சங்கர் கேன்சர் நோயால், இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆனால், சங்கர் இறப்பில் மர்மம் இருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். என் கணவரின் உடலை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கு, ரூ.3 லட்சம் செலவாகும் என ரிக் உரிமையாளர் தெரிவிக்கிறார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. எங்கள் நிலையை கருத்தில் கொண்டு, என் கணவரின் உடலை மீட்பதற்கு, தமிழக அரசு உதவி புரிய வேண்டும் என்றும், ரிக் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News