நைனாமலை கோயிலுக்கு ரூ.12.64 கோடியில் மலைப்பாதை அமைக்கும் பணி துவக்கம்

Nainamalai Temple-நைனாமலை கோயிலுக்கு ரூ.12.64 கோடியில் மலைப்பாதை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

Update: 2023-03-19 08:57 GMT

Nainamalai Temple

Nainamalai Temple-நாமக்கல் அருகே நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்ல ரூ. 12.64 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதை அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா, நைனாமலை கிராமத்தில், செங்குத்தான மலை மீது வாசம் செய்யும் பெருமாள் கோவில்தான் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் ஆகும். மிகத் தொன்மை வாய்ந்த இம்மலையில் ரிஷிகள் தவமிருந்து, ஸ்ரீ வரதராஜப் பெருமாளை தரிசித்து வந்ததாகவும், நைன மகரிஷி என்பவர் பெருமாளுக்கு கைங்கரியங்கள் செய்து, மலை மீதே சமாதி ஆனதால், இம்மலைக்கு நைனாமலை என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. பல யுகங்களாக ரிஷிகள் இங்கே இருந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மிக பழமையான கோவில்களில் நைனாமலை ஸ்ரீ வரதராஜபெருமாள் சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த ஆலயம் சேலம் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.

தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு சாய்வாகத் தோன்றும் இம்மலையின் உயரம் 3,000 மீட்டர் ஆகும். மிகவும் செங்குத்தான, குறைந்த அகலமே கொண்ட 3,700 படிகளில் ஏறி இம்மலைக் கோவிலை அடையலாம். மற்றொரு சிறப்பம்சமாக மலையின் முகட்டில், உச்சி முழுவதையும் உள்ளடக்கி, கோயில் கட்டப்பட்டுள்ளது. மலை ஏறி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் மலை இறங்கிச் சென்றாலே நமது மனதுக்கு மிகவும் உற்சாகமும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழக்கிழமைகளில், தமிழகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, நைனாமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மிகவும் செங்குத்தான மலையில், குறைந்த அகலமே கொண்ட 3,700 படிகள் உள்ளதால், குழந்தைகளும், முதியோர்களும் மலை மீது ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல், அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, மலையை நோக்கி கும்பிட்டுவீட்டுக்கு திரும்பி செல்வது உண்டு. இதனால் இம்மலைக்கு வாகனங்கள் சென்று வரும் வகையில் மலைப்பாதை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஏற்னவே இரண்டு முறை இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, மலைப்பாதை அமைக்கும் பணி கைவிடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வாகனங்கள் செல்லும் வகையில் ரூ. 12.64 கோடி மதிப்பீட்டில் புதிய மலைப்பாதை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையொட்டி சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் லோக்சபா எம்.பி சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மலைப்பாதை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News