நாளை முதல் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்: பொதுமக்களுக்கு வேண்டுகோள்

இந்த ஆண்டும் அக். 31 முதல் நவ. 6 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது.

Update: 2022-10-29 12:30 GMT

பைல் படம்

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு வரும் அக். 31ம் தேதி முதல் ஒரு வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் இந்தியா முழுவதும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் கடைபிடிக்கப்படுகிறது.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும், சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ஆம் தேதி முதல் ஒரு வாரம், ஒவ்வொரு ஆண்டும், இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மத்திய விழிப்புணர்வுத்துறை கமிஷனர் அறிவுரைப்படி இந்த ஆண்டும் அக். 31 முதல் நவ. 6 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. வளர்ந்த நாடாக உருவாக ஊழலற்ற இந்தியா, என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப் படுகிறது.

இதையொட்டி, தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வளர்ந்த நாடாக உருவாக ஊழலற்ற இந்தியா, என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்த சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரால், தமிழக கல்லூரி கல்வி மற்றும் பள்ளி கல்வி இயக்குநர்களுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், வளர்ந்த நாடாக உருவாக ஊழலற்ற இந்தியா, என்ற தலைப்பில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கட்டுரை போட்டி நடத்தி ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலிருந்தும் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களை தேர்வு செய்து அந்த விவரத்தை நவ. 4ம் தேதிக்குள், சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு  அனுப்ப வேண்டும். இதை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மற்றும் கல்லூரி முதல்வர்களும் கடைபிடிக்க வேண்டும்.

மேலும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மத்திய விழிப்புணர்வு ஆணையத்தின் வெப்சைட் cvc.gov.in மற்றும் சென்னை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் வெப்சைட் davc.tngov.in -ஆகியவற்றில் லாக் இன் செய்து, பொதுமக்கள் ஒவ்வொருவரும், சுயமாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு தனிமனிதரும் நேர்மையுடன் செயல்பட்டு ஊழலை ஒழிப்போம், ஊழலற்ற வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

ஊழல் குறித்து புகார் செய்யும் போது புகார்தாரர் தனது பெயரையும், முகவரியையும் தெளிவாகக் கூற வேண்டும். மத்திய அரசுத் துறை என்றால் மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கும், மாநில அரசுத் துறை என்றால் ஊழல் தடுப்பு இயக்குநருக்கும் புகார் செய்யலாம். ஒரு பொது ஊழியர் குறித்துப் பொய்யான புகார் தருவது இந்திய தண்டனைச் சட்டம்- பிரிவு 182 -இன் படி தண்டனைக்குரியது. பெயரில்லாத புகார்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஊழலில் சிக்கிய அதிகாரிகள் குறித்த தகவல்களை மத்திய விழிப்புணர்வு ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் தனித்தொகுப்பாக வெளியிட்டு வருகிறது.

Tags:    

Similar News