மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து நாமக்கல்லில் காத்திருப்பு போராட்டம்

மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாமக்கல்லில் மின்வாரியத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-09-26 06:45 GMT

தமிழகத்தில் மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து, நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஏராளமான தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் துணை மின் நிலையங்கள் மற்றும் பல்வேறு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். பிபி 2 முழுவதையும் ரத்து செய்யவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்திற்கு, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்திருந்தது.

இதையொட்டி நாமக்கல் மின்பகிர்மான வட்ட கூட்டு நடவடிக்கை குழு சார்பில், நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் துவங்கியது. கரூர் மண்டல செயலாளர் ஆனந்தபாபு போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.

தொழிலாளர் ஐக்கிய சங்கம், தொழிலாளர் சம்மேளனம், இன்ஜினியர்கள் சங்கம், சிஐடியு, ஏஐஎஸ்யு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். மாவட்டம் முழுவதும் இன்ஜினியர்கள், அதிகாரிகள் முதல் லைன்மேன்கள், ஹெல்பர்கள் வரை சுமார் 1,400க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மின்சார பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News